தாய்த் தெய்வம் - பெண் தெய்வ வழிபாடு - Thai deivam Information in Tamil Language

தாய்த் தெய்வம் - பெண் தெய்வ வழிபாடு - Thai deivam Information in Tamil: In this article read பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், தாய்த் தெய்வம்

தாய்த் தெய்வம் - பெண் தெய்வ வழிபாடு - Thai deivam Information in Tamil Language

In this article read பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், தாய்த் தெய்வம் Thai deivam Information in Tamil Language for tamil students

தாய்த் தெய்வம் - பெண் தெய்வ வழிபாடு

தமிழகத்தில் புரட்டாசி மாத வளர்பிறையில் நவராத்திரி விழா என்ற பெயரில் கோயில்களில் அம்மனை மையமிட்டு, பத்து நாட்களாகத் திருவிழா ஒன்று நடைபெறுகின்றது. இத்திருவிழாவில் முதல் ஒன்பது நாட்கள் அம்மன் 'தவம்' செய்கிறாள். பத்தாம் நாளில் அம்மன் எனப்படும் இத்தாய்த் தெய்வம் சப்பரத்தில் வடதிசை நோக்கி எழுந்தருளி ஊரில் ஒரு திடலுக்குச் சென்று எருமைத்தலை அரக்கனை (ஓர் ஆணை) அம்புகளை ஏவிக் கொன்றுவிட்டுத் தன் கோயிலுக்குத் திரும்புகிறாள்.

தனியான அம்மன் கோயில்களோடு இந்தத் திருவிழா சில சிவன் கோயில்களிலும் அம்மனை முன்னிறுத்தி நடத்தப் பெறுகின்றது. இருப்பினும், ஆண் துணையின்றித் தனியாக அமர்ந்திருக்கும் அம்மன் கோயில்களில்தான் இத்திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வகையான கோயில்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பூசை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில்களும் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத சாதிகளின் உடைமையாகவே உள்ளன. பழைய மண் கோட்டைகளும் கற்கோட்டைகளும் இருந்து அழிந்துபோன ஊர்களில் ஊரின் நடுப்பகுதியில் இருந்து அம்மன் புறப்பட்டு கோட்டையின் வாசல் வழியாக (அதாவது அந்த வாசல் இருந்த இடத்திலிருந்து) வெளியேறி முன் உள்ள திடலில் அல்லது கிழக்குத் திசைத் திடலில் எருமைத் தலை அரக்கனைக் கொன்று, கிழக்கு வாசல் வழியாகத் தன்னுடைய கோயிலுக்குத் திரும்பி வரும்.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மண்கோட்டைகள் இருந்து அழிந்திருக்கின்றன. இவை பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து ஏக்கர் பரப்பளவிற்கு உள்ளாகவே அமைந்திருக்கின்றன. இன்று இக்கோட்டைகள் இருந்ததற்கான அடையாளங்கள் மட்டும் பெரும்பாலான ஊர்களில் எஞ்சியிருக்கின்றன. இக்கோயில்கள் பெரும்பாலும் செல்லியம்மன், செல்லத்தம்மன், வடக்கவாச் செல்வி (வடக்குவாசல் செல்வி) என்னும் பெயர்களில் அமைந் துள்ளன.

பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே (அதாவது இன்றைய கேரளத்தை உள்ளிட்டு) தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வரமுடியும். தெய்வம் வடக்குத் திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மையாகும். பழந்தமிழர்களின் தாய்த் தெய்வம், அரசுகள் உருவானபோது போர்த் தெய்வமாக மாற்றப்பட்டு 'கொற்றவை' என்ற பெயரோடு வழங்கப்பட்டது. இப்பெயருக்கான வேர்ச்சொல் 'கொல்' என்பதாகும். பெருந்தெய்வக் கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகில் நின்று கொண்டு அல்லது அமர்ந்துகொண்டிருக்கும் உமை, திருமகள் ஆகிய தெய்வப் படிமங்களின் கையில் நீலம், தாமரை ஆகிய மலர்களே காட்டப்பட்டிருக்கும். ஆனால், தாய்த் தெய்வங்களோ பெரும்பாலும் சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் நான்கு அல்லது எட்டுக் கைகளுடன், எல்லாக் கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தியபடி போருக்கு ஆயத்தமான நிலையில் உள்ளன. இவை இரத்தப்பலி பெறுகின்ற தெய்வங்களாகும். எனவே இவற்றின் பூசாரிகளாகப் பண்டாரம், வேளார் (குயவர்), உவச்சர் (கம்பர்) போன்ற பார்ப்பனரல்லாத சாதியாரே உள்ளனர்.

தமிழ்நாட்டுத் தாய்த்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பா லும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் தரும் குறிப்புகளின்படி குழந்தை பெற்ற தாயினைக் குறிக்கும் சொல்லாகச் 'செல்வி' என்ற சொல்லே காணப்படுகின்றது. 'காடுகெழு செல்வி, கடல்கெழு செல்வி' ஆகிய தொடர்களால் தாய்த் தெய்வம் சுட்டப்படுகின்றது. பிற்காலத்தில் வந்த அம்மன் என்ற சொல்லைப் போல 'செல்வி' என்ற சொல் முற்காலத்தில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. 'அம்மன்' என்ற சொல்லுக்குச் 'சீமாட்டி' அல்லது 'உயர்குடிப் பெண்' என்பது பொருளாகும். அக்காலத்தில் தாய்த் தெய்வம் இப்போது போல ஊரின் நடுவில் இருக்கவில்லை. அதன் வாழிடம் காட்டுக்குள் இருந்தது. தாய்த் தெய்வத்தின் வழிபாட்டில் 'துணங்கைக் கூத்து' நடைபெறும். இந்த முற்குறிப்புகளோடு பின்வந்த திருமுருகாற்றுப்படை அவளுக்குப் 'பழையோள்' (பழையவள்) என்ற பெயரையும் கொடுத்து முருகனை அவள் மகனாகவும் ஆக்கிவைக்கின்றது. சிலப்பதிகாரம் பிறந்த காலத்தில் அவள் தந்தைத் தெய்வத்தின் (சிவனின்) மனைவி ஆக்கப்படுகின்றாள். அதன் பின்னர் கிழக்கிந்தியப் பகுதியில் இருந்து வந்த காளி வழிபாடும் அது குறித்த கதைகளும் பழைய தாய்த் தெய்வ வழிபாட்டோடு இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு வைதீக மதத்தின் எழுச்சியால் உருவானதாகும். வைதீகம் முழுமையாகத் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றபோது தாய்த் தெய்வம் சிவனின் மனைவியாகவும் திருமாலின் தங்கையாகவும் ஆக்கப்பட்டாள். அவளுடைய தோற்றக் கூறுகளை அடையாளம் காட்டும் தனித்தன்மைகள் ஓரளவு மறைக்கப்பட்டது; அவள் குடும்ப அமைப்பின் அச்சாணியாக மாற்றப்பட்டாள்.

இருந்தபோதும் வைதீகத்தின் முயற்சிகளால் தாய்த் தெய்வத்தின் தனித்தன்மையை ‘முற்றிலுமாக' அழித்துவிட முடியவில்லை . சிவன், திருமால் ஆகிய பெருந்தெய்வக் கோவில்களில் அம்மன், தாயார் ஆகிய பெயர்களில் தாய்த் தெய்வம் குடியமர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் 'ஆண் வாடையின்றித்' தனியாக தாய்த்தெய்வம் அமர்ந்துள்ள கோவில்களே தமிழ்நாட்டில் இன்றும் அதிகம் காணப்படுகின்றன. தாய்த்தெய்வங்கள் அனைத்தும் கையில் ஆயுதம் ஏந்தியுள்ளன என்பதே இவற்றின் தனித்தன்மையாகும். ஒரேயொரு வலிமையான கூறாக மட்டும் வைதீகத்தின் சாயல் தாய்த்தெய்வ உருவங்களின் மீது காணப்படுகிறது. தாலியின் மாற்று வடிவ மாகப் 'பொட்டு' எனும் அணிகலன் தாய்த் தெய்வத்தின் கழுத்தில் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஒன்றைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் வைதீகத்தால் தாய்த் தெய்வத்தின் மீது உண்டாக்க முடியவில்லை. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆயுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி (தீச்சுவாலை) மகுடம் கொண்டிருத்தல், கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறைகளில் பொங்கலும் முளைப்பாரியும் சாமியாட்டமும் இரத்தப் பலியும் தாய்த் தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளாகும். அண்மைக்காலமாகத் திருவிழா நாட்களில் மட்டும் தாய்த் தெய்வத்தை வைதீகப்படுத்தி பார்ப்பனர்கள் பூசை செய்கின்றனர். ஏனைய நாட்களில் தாய்த் தெய்வத்திற்கான பூசை, பார்ப்பனர் அல்லாத சாதியாராலேயே செய்யப்படுகின்றது.

தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்களின் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் பேரெழுச்சி பெற்றன. ஆந்திராவின் தென்பகுதி தொடங்கி குமரிவரை அக்காலத்தில் கற்களால் ஆன பெருந்தெய்வக் கோவில்களை அரசர்களும் அதிகாரிகளும் உருவாக்கினார்கள். எழுதப் பெற்ற தமிழக வரலாற்றைப் படிப்பவர்களுக்கு அக்காலத்தில் இவை மட்டுமே தமிழ்ச் சாதியினர் வழிபடும் இடங்களாக விளங்கின என்று தோன்றும். ஆனால் உண்மையில் அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான தாய்த் தெய்வக் கோவில்கள் இருந்திருக்கின்றன. இக்கோயில் அமைந்த இடத்திற்கும் அதற்கு முன்னுள்ள முற்றத்திற்கும் வேறு வழியின்றி அரசர்கள் வரிநீக்கம் செய்திருக்கின்றனர். இவ்வாறு வரி நீக்கம் செய்யப்பட்ட நிலங்களுக்கு 'இறையிலி நிலம்' என்று பெயர். ஒவ்வொரு ஊரிலும் ஒன்றோ இரண்டோ பலவாகவோ இவ்வகையான தாய்த் தெய்வக் கோயில்கள் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்கள் காலத்திலும் இருந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, "மழ நாடான ராஜாச்ரய வளநாட்டுப் பாச்சில் கூற்றத்துக் கீழ்பலாற்றுத் துறையூர்” என்ற ஊரிலிருந்து தாய்த் தெய்வக் கோவில்களைப் பற்றி முதலாம் இராசராசனின் (கி.பி.9851012) தஞ்சைக் கோயில் கல்வெட்டு பேசுகின்றது. “இவ்வூர் ... பிடாரி புன்னைத்துறை நங்கை கோயிலுந் திருமுற்றமும், பிடாரி பொதுவகை ஊருடையாள் ஸ்ரீகோயிலுந்திருமுற்றமும், இவ்வூர்க் காடுகள் கோயிலுந்திருமுற்றமும், இவ்வூர்த் துர்க்கையார் கோயிலுந் திருமுற்றமும், இவ்வூர் எறாடு கடக்கம் இவ்வூர்க் காளாபிடாரியார் ஸ்ரீகோயிலுந் திருமுற்றமும், ஐயன் கோயிலுந் திருமுற்றமும் இவ்வூர்ப் பிடாரி குதுரைவட்டமுடையாள் ஸ்ரீகோயிலுந் திருமுற்றமும் இவ்வூர்க் குளமுங் கரையும் ஆக இறையிலி நீங்கு நிலன் ...” என்பது கல்வெட்டுத் தொடராகும். இக்கோயில்களில் ஐயன் கோவில் என்று குறிப்பிடப்படும் ஐயனார் கோவில் தவிர ஏனையவை அனைத்தும் தாய்த் தெய்வக் கோவில்களாகும். கி.பி. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கம்வரை தமிழ்ச் சமூகத்தின் பெருந்திரளான மக்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் தான் நின்றிருக்கின்றனர் என்பதற்கு இவை போன்ற செய்திகள் அடையாளமாகும். பெருஞ்சமய நெறிக்குள் கரைந்துபோகாமல் தமிழ்ச் சமூகம் தன்னுடைய பண்பாட்டினைத் தகவமைத்துக் கொண்டது என்பதுதான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தியாகும். ஒற்றைத் தெய்வத்தை முன்னிறுத்தும் பெருஞ்சமய நெறிக்கு மாறாகத் தமிழ்மக்கள் ஒரே ஊரில் பலவகைத் தாய்த் தெய்வங்களை வணங்கி வந்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்க செய்தியாகும்.

கல்வெட்டு குறிப்பிடும் தாய்த் தெய்வக் கோவில்களில் சிற்சில வேறுபாடுகளுடன் கூடிய சடங்குகளும் வழிபாடுகளும் நிகழ்த்தப் பெற்றிருக்க வேண்டும். பின்னர் ஆயிரமாண்டுகள் கழித்தும் இவ்வகையான பண்பாட்டு மரபுகளில் சில இன்றுவரை தொடர்ந்து வலிமையாக உயிர் வாழ்கின்றன என்பதும் நாம் உணர வேண்டிய செய்தியாகும்.

தமிழ்நாட்டின் பெருந்தெய்வக் கோயில்கள் சிலவற்றில் குறிப்பாகச் சிவன் கோயில்களில் - தந்தைத் தெய்வத்தைவிட தாய்த் தெய்வம் ஆழ்ந்த பக்திக்கும் பெருத்த மரியாதைக்கும் உரியதாக விளங்குகின்றது. இவற்றோடு சில நுட்பமான சடங்கியல் அசைவுகளும் இக்கோயில்களில் காணப்படுகின்றன. கன்னியாகுமரியிலுள்ள குமரித் தெய்வம், திருநெல்வேலி காந்திமதி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் திருவானைக்காவல்) அகிலாண்டேஸ்வரி, காஞ்சி காமாட்சி என்பன போன்ற சில தாய்த் தெய்வங்களை இவ்வகையில் நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம் தமிழர்களின் கடல்துறைத் தெய்வமாகத் தோன்றியிருக்க வேண்டும். 'கடல்கெழு செல்வி' என்று சங்க இலக்கியம் (அகநா.370) குறிப்பிடும் பழைய தாய்த் தெய்வமும் அதன் சடங்குமுறைகளும் எவ்வாறு மறைந்து போயின என்று தெரியவில்லை. மீனைக் குலக் குழுச் சின்னமாகவும் கொடியாகவும் கொண்ட பாண்டியர் எனும் அரசமரபு தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றது. அவர்களுடைய தலைநகர்த் தெய்வமும் மீனோடு கூடிய பெயர் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியக் குறிப்பின்படி சுறாக் கொம்பை நட்டு வழிபட்ட 'தென் பரதவர்' என்னும் சாதியும் பிற மீனவச் சாதிகளும் நெடிய கடற்கரையும் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகம் முழுவதிலும் பரவலாக நாட்டார் தெய்வப் பெயரிடு முறைகளிலும் மீனா, மீனாள், மீனாட்சி ஆகிய பெயர்களின் செல்வாக்கினை நம்மால் மறுதலிக்கவியலாது. தந்தைத் தெய்வம் இல்லாமல் தனித்த தாய்த் தெய்வமாகத் தமிழ்நாட்டு அரசர்கள் குமரித் தெய்வத்தைக் கொண்டாடி இருக்கின்றனர் என்ற செய்தி கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. இக்குமரித் தெய்வமே சங்ககாலத் தமிழர்களின் ‘கடல்கெழு செல்வியாக' இருக்க வேண்டும். இந்நினைவுகளில் இருந்தே தமிழ்ப் பௌத்த மரபில் ‘மணிமேகலை' எனும் கடல் தெய்வம் தோன்றி இருக்க வேண்டும்.

மதுரை மீனாட்சித் தெய்வம் தானே தனியுரிமையோடு முடிசூடி அரசாளும் தெய்வமாகும். இக்கோயில் திருவிழாவில் திருமணச் சடங்குக்கு முன்னர் அவள் மட்டும் முடிசூடும் 'பட்டாபிஷேகம்' என்னும் திருவிழாச் சடங்கும் ‘திக்குவிஜயம்' என்ற பெயரில் அரசி நகரசோதனை செய்யும் திருவிழாச் சடங்கும் நிகழ்த்தப் பெறுகின்றன.'அவள் அரசியே தவிர அவள் கணவன் அரசன் அல்லன்.' இப்படி ஒரு தனித்தன்மை கொண்ட தெய்வம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. சிலப்பதிகாரம் குறிப்பிடும் 'தென்னவன் குலமுதல் கிழத்தி' (பாண்டியரின் குல தெய்வம்) இவளாகவே இருந்திருக்க வேண்டும். இத் தொடர்பையும் தொன்மையினையும் காட்டும் நுட்பமான சான்று ஒன்று அண்மையில் கிடைத்துள்ளது. எருமைத் தலை அரக்கனை அழிப்பதற்காக நவராத்திரித் திருவிழாவில் இவள் தவம் செய்யும்போது எட்டாம் திருநாள் விழாவில் மதுரை மீனாட்சிக்கு வேப்பம்பூ மாலை சூட்டப்படுகின்றது. 'வேப்பம்பூ மாலை சூடுதல்' என்பது தமிழ்நாட்டில் வேறு எங்கும் கண்டும் கேட்டும் அறியாத செய்தியாகும். பாண்டியர்களின் அடையாளப் பூமாலையான வேப்பம்பூமாலையை இத்தெய்வம் சூடிக் கொள்வது இத்தெய்வம் பாண்டியரின் குல தெய்வம் என்ற கருத்தினை உறுதி செய்கின்றது. (பாண்டியர்களின் குடிப்பெயர்களில் ஒன்றாக 'வேம்பன்' என்ற பெயரைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவதும் இங்கு கவனிக்கத்தக்கது.)

இவ்வாறே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றொரு தாய்த்தெய்வம் திருஆனைக்கா அகிலாண்டேசுவரி ஆகும். இக்கோயில் மதிற் சுவர்களில், இக்கோயிலில் தன் தலையைத் தானே அரிந்து (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் இருந்ததைக் காட்டும் சிற்பச் சான்றுகள் உள்ளன. (இவ்வகைச் சான்றுகள் தொல்லெச்சங்களாகத் தமிழ்நாட்டில் பல கோயில்களில் காணக் கிடைக்கின்றன.) இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளையில் ஆண் பூசாரி சேலையைத் தன் உடம்பில் சுற்றிக்கொண்டு தான் பெண்ணாக மாறியதாகப் பாவனை செய்துகொண்டு பூசை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் இக்கோயில், ஒரு காலத்தில் நரபலி பெறும் உக்கிரமான தாய்த் தெய்வக் கோயிலாகத் தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான். இக்கோயிலை வைதீகமயப்படுத்திப் பிற்காலத்தில் தந்தைத் தெய்வக் கோயிலாக ஆக்கியுள்ளார்கள். வைதீகமயப்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்தல் (தெய்வத்தின் அடங்காச் சினத்தைக் குறைக்கும் மந்திரங்களைச் செப்புத் தகட்டில் எழுதித் தலைவாசலில் பதித்தல்) ஆகும்.

இது ஒரு பார்ப்பனக் கதையாடலாகும். திருவானைக்கா கோயிலில் ஆதிசங்கரர் ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்து ‘தாடங்கம்' என்னும் காதணி ஒன்றை இத்தெய்வத்திற்கு அளித்தார் என்பது பார்ப்பனர்கள் கூறும் கதையாகும் (இக்கதையினைப் பயன்படுத்திக்கொண்டு இப்போதுள்ள சிருங்கேரிக் கிளைமடமான காஞ்சி மடத்து சங்கராச்சாரியார் தாடங்கம் செய்து கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.) காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இப்போது சங்கராச்சாரியார் கட்டுப்பாட்டில் உள்ளது. வாய்மொழி வழக்காறுகளின்படி சங்கராச்சாரியார்கள் கைப்பற்றுமுன் இக்கோயில் 'விசுவ கருமாக்கள்' எனப்படும் கம்மாளர் சாதியார்க்குச் சொந்தமானது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இக்காமாட்சித் தெய்வம் கௌதம புத்தரின் தாயான தாராதேவி வழிபாட்டிலிருந்து தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் இன்றளவும் காமாட்சித் தெய்வம் சிறு தெய்வமாகவே கருதப்படுகின்றது. காஞ்சிபுரத்தில் மட்டுமே இது வைதீக சமயத் தெய்வமாகும். தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் பொற்கொல்லர்கள் பங்காரு காமாட்சி (தங்கக் காமாட்சி) என்னும் தெய்வத்தையே குல தெய்வமாக வழிபடுகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்துக் கோயில்கள் பெரும்பாலும் மண்ணாலும் செங்கற்களாலும் மரச்சட்டங்களாலும் அமைக்கப்பட்டிருந்தன. பக்தி இயக்க எழுச்சியின்போது இவையும் பெருந் தெய்வக் கோயில்களைப் போலக் கற்கோயில்களாக மாற்றப்பட்டதுண்டு. சங்க இலக்கியங்களில் கோயில்களைக் குறிக்க வரும் ‘கோட்டம்' என்ற சொல் கி.பி. 8,9ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கின்றது. இவற்றுள் 'காமக் கோட்டம்' என்ற சொல்லே தாய்த் தெய்வக் கோயில்களைக் குறித்ததாக இருக்க வேண்டும். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் இன்றளவும் 'காமக் கோட்டம்' என்றே வழங்கப் பெறுகின்றது. பார்ப்பனச் சொல்லாடல் இதனையே 'காமகோடி' என்று தன்மயமாக்கி வைதீகமயப்படுத்தியிருக்கின்றது.

9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சிலவற்றில் 'காமக் கோட்டம் அழித்தார் பட்ட பாவம்' என்ற தொடர் காணப் படுகின்றது. இது, ஏதோ சில காரணங்களுக்காகக் காமக் கோட்டங்கள் என்னும் 'தாய்த் தெய்வக் கோயில்கள்' அழிக்கப் பட்ட வரலாற்று உண்மையை உணர்த்துகின்றது. அவை, தந்தைத் தெய்வக் கோயிலாக மாற்றப்படுவதற்காக வைதீக சமயத்தவரால் அழிக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக பக்தி இயக்கம் ஆணாதிக்க உணர்வினை முன்னிலைப்படுத்தியதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். தாய்த் தெய்வக் கதைகளும் சடங்குகளும் பலமுனைப்பட்டவையாக அமைகின்றன. அவற்றுள் பெரும்பா லானவற்றில் மக்களைக் காப்பாற்றுவதற்காகத் தாய்த் தெய்வம் ஆயுதம் ஏந்துவதையோ அருள் செய்வதையோ வழக்கமாகக் கொண்டுள்ளன. பொதுவாகத் தாய்த் தெய்வங்கள் ஆறாத சினம் கொண்டவை. எனவேதான் அவை அக்கினி மகுடம் (நெருப்புச் சுவாலையால் ஆன தலையணி) உடையனவாகக் காணப்படுகின்றன. விதிவிலக்காகத் தாய்த் தெய்வக் கதைகள் கொலை செய்த கணவனைப் பேயாக வந்து பழி வாங்கிய ‘நீலி' என்னும் இயக்கி கதையினையும் அழுக்குக்கும் வறுமைக்கும் அடையாளமான, ஒரு காலத்தில் பரவலாக வழிபடப் பெற்ற ‘மூதேவி' தெய்வ வழிபாட்டினையும் ஏற்றுக்கொண்டது ஆய்வுக் குரிய செய்தியாகும்.

இது போலவே, 'மாகாளம்' என்னும் வழிபாட்டுத் தலங்களைத் தமிழக வரலாற்றில் பார்க்கிறோம். உஞ்சேனை மாகாளம், அம்பர் மாகாளம் எனச் சில மாகாளத்தலங்கள் தேவாரத்தில் குறிக்கப்படுகின்றன. மாகாளி, உஜ்ஜயினி, மாகாளி ஆகிய பெயர்களோடு (உச்சினி) மாகாளி என்னும் தாய்த் தெய்வ வழிபாடும் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. வடநாட்டில் உள்ள உஜ்ஜயினி, ஒரு மாகாளத் தலமாகும். இத்தலத்தில் உள்ள காளி தேவியே காளிதாசனுக்குக் கவிஞனாக வரங்கொடுத்தவள். தமிழ் நாட்டில், 'காளி', என்ற சொல்வழக்கு முதன் முதலில் சிலப்பதிகாரத்திலேயே காணப்படுகிறது. எனவே காளி வழிபாட்டுத் தலங்களான மாகாளத் தலங்களும் பின்னர் தந்தைத் தெய்வக் கோயில்களோடு சைவப் பெருஞ்சமயத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வட்டாரம், சாதி ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு தாய்த் தெய்வங்களைப் பற்றி ஒரு பறவைப் பார்வை செலுத்தினால் அடிப்படையான சில பொதுக் கூறுகளை நம்மால் இனங்காண முடிகின்றது. பெருந் தெய்வக் கோயில்களைப்போல வரையறுக்கப் பட்ட விழாநாட்கள் அங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை. மாறாக, சடங்குகளே தாய்த் தெய்வக் கோயில்களில் முதன்மை பெறுகின்றன; அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே தாய்த் தெய்வங்கள் பெரும்பாலும் சடங்கியல் சமயச் (Ritualisitcreligion) சார்பையே வெளிப்படுத்துகின்றன. தாய்த் தெய்வ வழிபாட்டின் தொன்மைக்கு இஃதொரு வலிமையான சான்றாகும். பெருஞ்சமயப் புயலுக்குள் சிக்காமல் தாய்த் தெய்வங்கள் தனித்து நிற்பதற்கும் இதுவே வலிமையான காரணமாகும்.

தாய்த்தெய்வ வழிபாட்டின் மூல வடிவமான 'யோனி'த் தெய்வ வழிபாடு இன்னும் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் நடைமுறையில் உள்ளது என்பது நமக்கு வியப்பான செய்தியாகும். இத்தெய்வத்துக்கான வடிவங்கள், முகம் இல்லாமல் (முகத்துக்குப் பதிலாகத் தாமரை உள்ள) ஒன்றிரண்டு மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. பெரும்பாலான தமிழர் வீடுகளில் (பிறந்த குழந்தை உயிரோடு இருந்தால்) வீட்டின் உள்ளாகவோ வீட்டின் பின்புறமாகவோ மகப்பேற்றுத் தீட்டைக் கழிப்பதற்குச் செய்யும் சடங்கானது யோனித் தெய்வ வழிபாடே ஆகும்.

தாய்த் தெய்வ வழிபாட்டின் மற்றுமொரு கூறு. அத்தெய்வம் தன்னுடைய ஆற்றலை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்வது ஆகும். விசயநகர ஆட்சியின் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டு அம்மன் கோயில்களில் எருமைத் தலை அரக்கனைக் கொல்லும் நவராத்திரித் திருவிழா நடைபெற்றதற்கு நமக்குத் தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் இல்லை . விதிவிலக்காக இளங்கோவடிகள் மட்டும், கொற்றவையினை ‘கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால்' எனக் குறிப்பிடுகிறார். ஆனால் ஆண்டுக்கொரு முறை கோடை காலத்தில், ‘சூறை' என்னும் திருவிழா நடைபெற்றது (இன்றும் தென்மாவட்டங்களில் சில ஊர்களில் நடத்தப்படுகின்றது). இந்தத் திருவிழாவில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஒன்று உண்டு. அதாவது, தாய்த் தெய்வத்தை அந்த நாளில் அதற்குரிய கோயிலில் வழிபடாமல் ஊர்ப் பொதுவிடத்தில் அல்லது மந்தையில் ஒருநாள் தற்காலிகமாகத் திருநிலைப்படுத்துகிறார்கள்; வழிபாடு செய்கின்றார்கள். இத்திருவிழாவில் தெய்வ உருவம் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்படுவதில்லை. அதற்கு மாற்றாக கோமறத்தாடியே (முதல் சாமியாடியே) தெய்வத்தின் பிரதிநிதி யாக ஊரினைச் சுற்றி வருகின்றார். தெய்வத்திற்குக் கூழ் சமைத்துப் படைக்கப்படுகின்றது. பின்னர் அக்கூழ் ஊர்மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. தாய்த் தெய்வத்திற்கான ஊட்டு விழாவாகப் பெருமளவு இவ்விழாவினைக் கருதலாம்.

தாய்த் தெய்வத்தின் தோற்றக் கூறுகளில் சிலவும், வழிபாட்டின் பொதுக் கூறுகளில் சிலவுமே இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தாய்த் தெய்வத்தின் தனித்த கூறுகள் பெருநூல் அளவுக்குப் பேசப்பட வேண்டியவை.

இனி, இத்தாய்த் தெய்வங்களின் பெயர்களில் சிலவற்றைக் குறிப்பிட்டுக் காணலாம். இப்பெயர்கள் வைதீகச் சார்பின்றித் தாய்த் தெய்வத்தின் தனியாளுமையினை விளக்கக்கூடிய பெயர்களாகும். 'வெயிலுகந்தாள்', 'கருக்கினிலமர்ந்தாள்', 'வாள்மேல் நடந்தாள்' என்பவை அவற்றுள் சிலவாகும். இவற்றுள் வெயிலுகந்தாள் என்பது வெயில் (கோடை) காலத்தில் வெப்பு நோயை வழங்குகின்ற 'மாரி'யம்மனுக்கு மக்கள் வழங்கிய மற்றொரு பெயராகும். 'கருக்கினில் அமர்ந்தாள்' என்பது பனைமரத்தில் குடியிருப்பதாக நம்பப்பெறும் ஒரு தாய்த்தெய்வத்தின் பெயராகும். 'வாள்மேல் நடந்தாள்' என்பது போர்த் தெய்வமான தாய்த் தெய்வத்தைக் குறிக்க எழுந்த பெயராகும். அரசர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் வாளினையும் குடையினையும் வடதிசையினை நோக்கி வைப்பதான குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இது சடங்கு நிகழ்வாக இருத்தல் வேண்டும். எனவே 'வாள்மேல் நடந்தாள்' என்பது மன்னர்களின் காலத்தில் கொற்றவையின் பெயராக இருத்தல் வேண்டும்.

இதுபோன்ற பெயர் வழக்குகள் தமிழ்நாட்டில் வட்டார வேறுபாடு உள்ளனவாக அமைந்திருக்கின்றன. தென் தமிழ்நாட்டில் அம்மன் என்பதாக முடியும் பெயர்கள் தமிழ்நாட்டில் வடபகுதியில் 'ஆயி' என்பதாக வழங்கப்பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, 'குழுமாயி', 'பூமாயி', 'பெரியாயி', 'சிலம்பாயி' என்பவற்றைக் குறிப்பிடலாம்.

இன்னும் சில தாய்த் தெய்வங்கள் குறிப்பிட்ட மக்கள் திரளுக்குரியவையாக அமைகின்றன. இன்று, அவை பொதுப்பட எல்லோராலும் வணங்கப்படுகின்றன. என்றாலும் குறிப்பிட்ட சில சாதியாருக்கு அவை பெரிய அளவில் 'உணர்வு உரிமை' உடையனவாகக் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் 'பத்திரகாளி' அம்மனைப் பெருமளவு நாடார் சாதியினரே வணங்குகின்றனர். 'பத்ரம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு ஓலை என்பதே பொருளாகும். நாடார் என்று இக்காலத்தில் அறியப்படும், மரபு வழியாகப் பனைத் தொழிலோடு தொடர்புகொண்ட மக்கள் திரளின் ‘கணத்' (clan) தெய்வமாக இத்தெய்வம் தோன்றியிருக்க வேண்டும். அதுபோலவே ஆசாரி என்ற அறியப்படும் கம்மாளச் சாதியினர் பெரும்பாலும் 'காமாட்சி' அம்மனைக் குடித்தெய்வமாகக் கொண்டுள்ளனர். இவர்களில் தெலுங்கு பேசுபவரே பங்காரு (தங்கம்) காமாட்சியை வணங்குபவர்கள். இவ்வாறாகத் தமிழ்நாட்டில் பல நூறு தாய்த் தெய்வங்களை அடையாளம் காணமுடியும். தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் மற்றொரு தாய்த்தெய்வத்தின் பெயர் 'லோகநாயகி', 'லோகாம்பாள்' என்பதாகும். இது மேலோர் மரபு சார்ந்த தெய்வப் பெயர் போலவே தோன்றுகின்றது. தென் மாவட்டங்களில் இப்பெயரே உலகம்மை, உலகநாயகி என்று வழங்கப்படுகின்றது. இப்பெயர்க்குரிய தெய்வங்கள் அரச குடும்பத்தையோ அரசு அதிகாரிகள் குடும்பத்தையோ சேர்ந்தவையாகவோ இருக்க வேண்டும். இவை ஏதோ ஒரு காரணத்தால் சமாதி (பள்ளிப்படை) செய்யப்பெற்ற அரச குடும்பத்துப் பெண்களை வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட கோயில்களாகும். எளிய குடிமக்களில் பெண்களுக்காகச் சமாதிக் கோயில் எழுப்பும் வழக்கம் இல்லை . அரசதிகாரம் சார்ந்த குடும்பத்துப் பெண்களுக்கு மட்டும் விதிவிலக்காக இவ்வகைக் கோயில்கள் அமைந்திருக்கின்றன.

மேற்கூறியவை அனைத்தும் கோயில்களில் திருநிலைப்படுத்தி வணங்கப்பெறும் தாய்த் தெய்வங்களாகும். கோயில் என்றொரு இடமின்றி வழங்கப்பெறும் வீட்டுத் தெய்வங்களும் உண்டு. அவை பற்றி அடுத்துக் காணலாம். பொதுவாக, தமிழ்க் குடும்பங்களில் திருமணம் போன்ற நன்னிகழ்ச்சியை எதிர்கொள்கின்றபோது குறிப்பிட்ட சில தெய்வங்களை வணங்குகிற மரபு ஒன்று நடைமுறையில் இருக்கிறது. இவ்வாறு வழிபடப்பெறும் தாய்த் தெய்வங்கள் மானிடப் பெண்ணாக வாழ்ந்து மறைந்தவையாகும். திராவிட மொழி பேசும் மக்களிடத்தில் தாய்த்தெய்வ வழிபாட்டு உணர்வு மிக ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதனை வேறுசில சான்றுகளாலும் அறிய முடிகின்றது.

கத்தோலிக்கக் கிறித்தவமதம் தென் தமிழ்நாட்டுக் கடற்கரையில் கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கால் கொண்டது. தேவகருவாக ஒரு மானிடத்தாய் வயிற்றில் உருவாகியவர் இயேசுநாதர். மனிதனுக்காக மண்ணில் தன் பாடுகளைக் கழித்துவிட்டு மணவாழ்க்கையின்றி விண்ணுலகை எய்தியவர். தமிழ்நாட்டுக் கத்தோலிக்க கிறித்துவத்தில் இயேசுநாதரைப் போலவே அவருடைய தாய் மரியாளும் வழிபடப்படுகிறார். தொடக்கக் கால கத்தோலிக்கக் கிறித்தவமதப் பரப்புநர்கள் திராவிடப் பண்பாட்டில் தமிழ் மண்ணின் - தாய் வழிபாட்டுணர்வினை நன்றாக உள்வாங்கிக் கொண்டனர். திருச்சி மாவட்டம் ஏலாக்குறிச்சியில் தூய மரியாளின் பெயரில் 18ஆம் நூற்றாண்டில் ஒரு கோயிலைக் கட்டினார் வீரமாமுனிவர். பெஸ்கி எனும் இயற்பெயருடைய அவர் இத்தாலி நாட்டுக்காரர். தான் கட்டிய கோயிலில் தாய் மரியாளுக்கு அவர் 'பெரிய நாயகி' என்ற பெயரிட்டார். அவர் அங்கு அமைத்த குடியிருப்பிற்கு 'அன்னையின் காவலில் உள்ள ஊர்' எனப் பொருள்படுமாறு 'திருக்காவலூர்' என்று பெயரிட்டார். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் அமைந்த தொடக்ககால கத்தோலிக்கக் குடியிருப்புகள் பல ‘காவனூர்', 'காவலூர்' என்று பெயரிடப்பட்டன. 'காவல் உணர்வு' என்பது தாய்த்தெய்வம் வழங்குகின்ற பாதுகாப்பு உணர்வாகும். வீரமாமுனிவர் 'அன்னை அழுங்கல் அந்தாதி', 'திருக்காவலூர்க் கலம்பகம்', 'பெரிய நாயகி பேரில் பதிகம்' ஆகிய நூல்களையும் அப் பெரியநாயகி பேரிலேயே பாடினார். “உருவில்லா உருத்தாங்கி உலகிலொரு மகனுதிப்ப கருவில்லாக் கருத்தாங்கி கன்னித்தாய் ஆயினையே” என்றும் பெரியநாயகியைப் பாடினார் அவர். பெரிய நாயகி என்பது பழைய தாய்த்தெய்வத்தை நினைவுபடுத்தும் பெயராகும். முத்தாரம்மன், முத்தியாலு அம்மன் ஆகிய பெயர்களும் அவ்வாறு அமைந்தவையே. முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் அம்மனின் பெயர் பெரியநாயகியே ஆகும். இந்த உணர்வோடுதான் கத்தோலிக்கக் கிறித்துவத் தேவாலயங்களை, கிறித்துவர் அல்லாத மக்கள் ‘இயேசு கோயில்' என்பதற்குப் பதிலாக 'மாதா கோயில்' என்று பெயரிட்டழைத்து வருகின்றனர்.

வைதீகச் சார்பற்ற எளிய தமிழ் மக்கள் இவ்வாறு பிற சமயத் தெய்வங்களையும் தமதாக ஏற்றுக்கொள்ளும் சனநாயகத் தன்மை உடையவர்களாக இருந்தார்கள்; இருக்கின்றார்கள். நெல்லை, குமரி மாவட்டங்களில் பரவலாக வணங்கப்பெறும் இசக்கியம்மன் ஒரு சமண சமயத்தெய்வமாகும். சமணமதம் தென் தமிழ் நாட்டில் கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பூண்டற்றுப்போயிற்று. ஆனால், 'அம்பிகா யக்ஷி' என சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும் பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களில் இன்றளவும் வழிபடப்பெறுகின்றது. இதனைப்போலவே தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வழிபடப்பெறும் பொன்னியம்மனும் 'ஜ்வாலா மாலினி' என்ற சமணசமயப் பெண் தெய்வமே ஆகும். சமணமதம் வேரற்றுப் போனாலும் அம்மதம் உருவாக்கிவைத்திருந்த தாய்த் தெய்வங்களை வைதீகத்திற்கு அடிமைப்படாத எளிய மக்கள் - குறிப்பாகப் பெண்கள் - தங்களுடைய வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக ஏற்றுக்கொண்டு அக்கோயில்களைப் பேணிக் காத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பரவலாக வழிபடப்படும் தாய்த் தெய்வங் களை ஏழெட்டு வகைகளுள் அடக்கிவிடலாம். முதலாவது வகை. ஊர்ப்பொதுத் தெய்வமாக அமைந்தவை. நான்கு அல்லது எட்டுக் கைகளோடு அமைந்து எல்லாக் கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தி எருமைத்தலை அரக்கனைக் கொன்றொழிப்பவை. இக்கோயில்கள் விதிவிலக்காக அன்றி வடக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஊரின் நடுவிடம் அல்லது மந்தையே இத்தெய்வங்களின் இருப்பிடமாக அமையும். இரண்டாவது வகையாக மாரியம்மனைக் குறிப்பிடலாம். 'மாரி' என்ற சொல்லுக்கு மழை என்று பொருள். முறையான ஊர் வழிபாடு பெறாத காலத்தில் இத்தெய்வம் சினங்கொண்டு மழையினை நிறுத்திவைத்துவிட்டு வெப்பு நோயினைப் பரப்பிவிடும். மனிதர்களோடு மட்டுமன்றிக் கால்நடைகளுக்கும் இத்தெய்வம் வெப்பு நோயை (கோமாரி) வழங்கித் தண்டிக்கும். அக்கினி மகுடம் கொண்ட இத்தெய்வத்திடம் அடியவர்கள் தாங்கள் அக்கினிச்சட்டி ஏந்தித் தங்களை ஒறுத்துக்கொண்ட அருள் வேண்டி நிற்பது வழக்கம்.

இருட்டிலும் தன்னை வழிபடும் மக்களின் கனவிலும் மட்டும் வாழும் பேச்சி (பேய்ச்சி) அல்லது 'வனப்பேச்சி' அம்மன் மக்களை அச்சுறுத்தும் வகையினைச் சார்ந்தது. இத் தெய்வத்தினை அமைதிப்படுத்த கோழி போன்ற சிறுவகை இரத்தப் பலிகள் கொடுக்கப்படுவதும் வழக்கம். 'பே' என்ற தமிழ்வேர்ச் சொல்லுக்கு அச்சம் என்பது பொருளாகும்; இது மூன்றாவது வகையாகும்.

மற்றொரு வகைத் தெய்வங்கள் பத்தினியம்மன், தீப்பாய்ச்சியம்மன் என்ற பெயரில் பாலியல் வன்முறைக்கு ஆளானவையாகும். இன்னுமொரு வகைத் தெய்வங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. மறைந்துவிட்ட சாக்த வழிபாட்டின் எச்சங்களாகவும் காபாலிக, காளாமுக வழிபாட்டோடு தொடர்புடையதாகவும் இவை கருதப்படுபவை. இத்தெய்வங்களுக்கான வழிபாடுகள் பெரும்பாலும் சடங்குகளாக அமைகின்றன. இச்சடங்குகள் சுடுகாடு அல்லது சுடுகாட்டின் அண்மையில் நிகழ்த்தப்படுவதும் இவற்றில் மனித எலும்புகள் இடம் பெறுதலும் ஆராய்ச்சிக்குரியவையாகும். இத்திருவிழாக்கள் சில இடங்களில் 'மயானக் கொள்ளை ' அல்லது 'மயானக் கொல்லை' என அழைக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் நிகழ்த்தப்பெறும் 'மசானி' அம்மன் வழிபாடும் இந்த வகையைச் சார்ந்ததாகும். ‘ஸ்மசானம்' என்ற வடசொல்லே மசானம் - மயானம் - மாசானம் - மாசானி என மாறிமாறித் திரிந்து வந்துள்ளது. தென் மாவட்டங்களில் மாசானம் என்பது ஆண்பாற் பெயராகவும் வழங்கி வருகின்றது. இவற்றைச் சுடலைத் தெய்வங்கள் என்று வகைப்படுத்தலாம்.

தமிழகத்தின் தாய்த் தெய்வங்களில் தனித்துப் பேசக்கூடிய பிறிதொரு வகை, தெலுங்கு மக்களோடு தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்து வந்த தெய்வங்களாகும். முத்தியாலம்மன், ரேணுகாதேவி, சீதளாதேவி, எல்லம்மன் (எல்லையம்மன்) ஆகியவை இந்த வகையினைச் சேர்ந்தவையாகும். இவற்றுள் சீதளா(குளிர்ந்த) தேவி என்பது மாரியம்மனின் தெலுங்கு வடிவமாகும். வண்ணார் வீட்டில் வளர்க்கப்பெறும் முளைப்பாரி யோடு வணங்கப்பெறும் ரேணுகாதேவி மாரியம்மன் மாற்று வடிவமாகும்.

மூத்தாயி (மூத்த ஆய்) அல்லது முத்தாயி, முத்தாச்சி 'அரியநாச்சி', 'அரியாக் கிழவி' ஆகிய பெயர்களில் வழங்கப் படும் தெய்வங்களையும் நோக்க வேண்டும். இவற்றை வழிபடு வோருக்குக் குறைந்தது நான்கைந்து தலைமுறைகளுக்கு இவை முற்பட்டவையாம். நினைவுகளை மட்டுமே முன்னிறுத்திக்கொண்டு இவ்வகைத் தாய்த் தெய்வங்களை அக்குடும்பத்தினர் தங்கள் ‘குலமுதல்வி'யாகக் கொண்டாடுகின்றனர். மிகச்சில இடங்களில் அரியாக்கிழவி என்ற பெயரோடு குலதெய்வக்கோயில்களில் இத்தெய்வங்களுக்குச் சிறு சிலை வடிவில் ஓர் இடம் அளிக்கப் படுவதும் உண்டு. குடும்பத் தெய்வங்களில் மற்றொரு வகை 'கன்னி' ஆகும். பூப்பெய்தும் பருவத்திலோ, பூப்பெய்திய பிறகோ, இளவயதில் இறந்துபோன பெண்கள் குடும்பத்திற்குரிய கன்னித் தெய்வமாக்கப்படுகின்றனர். இவற்றுக்குப் படைக்கப்படும் சிற்றாடைகளுக்குக் 'கன்னிச் சிற்றாடை' என்று பெயர். மஞ்சள் வண்ணத்தில் சிவப்புக் கரைகளோ கட்டங்களோ இடப்பட்ட, ஏறத்தாழ மூன்று முழம் உள்ள சிறுவகைச் சேலையாகும் இது. விஜயநகர ஆட்சிக்காலத்தில் பாவாடையும் ஆங்கிலேயர் காலத்தில் கவுனும் அறிமுகம் ஆவதற்கு முன்னர் தமிழகத்துப் பெண்பிள்ளைகள் இவ்வகையான ஆடையையே அணிந்திருந்தனர். மூன்றாவது வகையான குடும்பத் தெய்வங்கள் சற்று ஆழமான பார்வைக்கு உரியனவாகும். திருமணமாகிக் குழந்தை பெற்று மிக இளவயதில் இறந்துபோன பெண்களும் குடும்பத் தெய்வங்கள் ஆவார்கள். இவ்வகைத் தெய்வங்களுக்குப் பொதுவாக வழங்கும் பெயர் ‘மாலையம்மன்' ஆகும். 'கன்னித் தெய்வமல்ல', 'மணமாலை சூடியவள்', 'பெற்றுப் பெருகியவள்' என்பதே இங்கு மாலை என்ற சொல் உணர்த்தும் பொருளாகும். திருமணம் உறுதி செய்யப்பட்டுவிட்டால் 'பெண்ணுக்கு மாலை பூத்துவிட்டது' என்ற சொல்லாடலைத் தென்மாவட்டங்களில் இன்றும் நிறையவே கேட்கலாம்.

தமிழகத்தின் தாய்த்தெய்வ வழிபாடு நூற்றுக்கணக்கான பரிமாணங்களை உடையது. இப்பரிமாணங்கள் அத்தெய்வங்கள் வழிபடப்பெறும் வட்டாரத்தின் சமூக அரசியல் வரலாற்றோடு தொடர்புடையன. இவ்வரலாற்று அசைவுகளை அளந்தறியவும் எழுதிக் காட்டவும் ஆய்வாளர்களும் நூற்றுக்கணக்கில் தேவைப்படுகின்றனர். இத்தேவை நிறைவு செய்யப்படும்போதுதான் தமிழகச் சமுதாய வரலாற்றின் உறுதியான அடித்தளம் கட்டியமைக்கப் பெறும் என்பதில் ஐயமில்லை.

COMMENTS

Name

10 line essay,281,10 Lines in Gujarati,1,Aapka Bunty,3,Aarti Sangrah,3,Aayog,3,Agyeya,4,Akbar Birbal,1,Antar,170,anuched lekhan,54,article,17,asprishyata,1,Bahu ki Vida,1,Bengali Essays,135,Bengali Letters,20,bengali stories,12,best hindi poem,13,Bhagat ki Gat,2,Bhagwati Charan Varma,3,Bhishma Shahni,6,Bhor ka Tara,1,Biography,141,Biology,88,Boodhi Kaki,1,Buddhapath,2,Chandradhar Sharma Guleri,2,charitra chitran,205,chemistry,1,chhand,1,Chief ki Daawat,3,Chini Feriwala,3,chitralekha,6,Chota jadugar,3,Civics,32,Claim Kahani,2,Countries,10,Dairy Lekhan,1,Daroga Amichand,2,Demography,10,deshbhkati poem,3,Dharmaveer Bharti,10,Dharmveer Bharti,1,Diary Lekhan,7,Do Bailon ki Katha,1,Dushyant Kumar,1,Economics,29,education,1,Eidgah Kahani,5,essay,737,Essay on Animals,3,festival poems,4,French Essays,1,funny hindi poem,1,funny hindi story,3,Gaban,12,Geography,44,German essays,1,Godan,8,grammar,19,gujarati,30,Gujarati Nibandh,214,gujarati patra,20,Guliki Banno,3,Gulli Danda Kahani,1,Haar ki Jeet,2,Harishankar Parsai,2,harm,1,hindi grammar,14,hindi motivational story,2,hindi poem for kids,3,hindi poems,54,hindi rhyms,3,hindi short poems,8,hindi stories with moral,15,History,42,Information,890,Jagdish Chandra Mathur,1,Jahirat Lekhan,1,jainendra Kumar,2,jatak story,1,Jayshankar Prasad,6,Jeep par Sawar Illian,3,jivan parichay,147,Kafan,8,Kahani,25,Kamleshwar,8,kannada,98,Kashinath Singh,2,Kathavastu,33,kavita in hindi,41,Kedarnath Agrawal,1,Khoyi Hui Dishayen,3,kriya,1,Kya Pooja Kya Archan Re Kavita,1,long essay,426,Madhur madhur mere deepak jal,1,Mahadevi Varma,7,Mahanagar Ki Maithili,1,Mahashudra,1,Main Haar Gayi,2,Maithilisharan Gupt,1,Majboori Kahani,3,malayalam,139,malayalam essay,112,malayalam letter,10,malayalam speech,36,malayalam words,1,Management,1,Mannu Bhandari,7,Marathi Kathapurti Lekhan,3,Marathi Nibandh,261,Marathi Patra,25,Marathi Samvad,13,marathi vritant lekhan,3,Mohan Rakesh,2,Mohandas Naimishrai,1,Monuments,1,MOTHERS DAY POEM,22,Muhavare,138,Nagarjuna,1,Names,2,Narendra Sharma,1,Nasha Kahani,6,NCERT,27,Neeli Jheel,2,nibandh,742,nursery rhymes,10,odia essay,60,odia letters,86,Panch Parmeshwar,10,panchtantra,26,Parinde Kahani,1,Paryayvachi Shabd,229,patra,236,Physics,2,Poos ki Raat,9,Portuguese Essays,1,pratyay,186,Premchand,65,Punjab,28,Punjabi Essays,72,Punjabi Letters,13,Punjabi Poems,9,Raja Nirbansiya,4,Rajendra yadav,3,Rakh Kahani,2,Ramesh Bakshi,1,Ramvriksh Benipuri,1,Rani Ma ka Chabutra,1,ras,1,Report,5,Roj Kahani,2,Russian Essays,1,Sadgati Kahani,1,samvad lekhan,194,Samvad yojna,1,Samvidhanvad,1,Sandesh Lekhan,3,sangya,1,Sanjeev,2,sanskrit biography,4,Sanskrit Dialogue Writing,5,sanskrit essay,269,sanskrit grammar,157,sanskrit patra,30,Sanskrit Poem,3,sanskrit story,2,Sanskrit words,26,Sara Akash Upanyas,7,Saransh,61,sarvnam,1,Savitri Number 2,2,Shankar Puntambekar,1,Sharad Joshi,3,Sharandata,1,Shatranj Ke Khiladi,1,short essay,66,slogan,3,sociology,8,Solutions,3,spanish essays,1,speech,6,Striling-Pulling,25,Subhadra Kumari Chauhan,1,Subhan Khan,1,Suchana Lekhan,12,Sudarshan,2,Sudha Arora,1,Sukh Kahani,2,suktiparak nibandh,20,Suryakant Tripathi Nirala,1,Swarg aur Prithvi,3,tamil,16,Tasveer Kahani,1,telugu,66,Telugu Stories,65,uddeshya,14,upsarg,67,UPSC Essays,100,Usne Kaha Tha,2,Vinod Rastogi,1,Vipathga,2,visheshan,2,Vrittant Lekhan,1,Wahi ki Wahi Baat,1,Wangchoo,2,words,44,Yahi Sach Hai kahani,2,Yashpal,5,Yoddha Kahani,2,Zaheer Qureshi,1,कहानी लेखन,17,कहानी सारांश,56,तेनालीराम,4,नाटक,51,मेरी माँ,7,लोककथा,15,शिकायती पत्र,1,सूचना लेखन,1,हजारी प्रसाद द्विवेदी जी,9,हिंदी कहानी,110,
ltr
item
HindiVyakran: தாய்த் தெய்வம் - பெண் தெய்வ வழிபாடு - Thai deivam Information in Tamil Language
தாய்த் தெய்வம் - பெண் தெய்வ வழிபாடு - Thai deivam Information in Tamil Language
தாய்த் தெய்வம் - பெண் தெய்வ வழிபாடு - Thai deivam Information in Tamil: In this article read பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், தாய்த் தெய்வம்
HindiVyakran
https://www.hindivyakran.com/2021/12/thai-deivam-information-in-tamil.html
https://www.hindivyakran.com/
https://www.hindivyakran.com/
https://www.hindivyakran.com/2021/12/thai-deivam-information-in-tamil.html
true
736603553334411621
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content